Monday, July 11, 2011

யாதுமாகி நில்

பெண் அடங்கிப்போவாள் அன்புக்கு. அடக்கியாள நினைப்பவரை அடக்கி முடக்கிவிடுவாள். தனக்கு அடங்கிவிட்டாள் என்று நினைக்கும் ஆணுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். பெண் மௌனமாய் இருந்தால் அடங்கிவிட்டதாக அர்த்தமில்லை. பெண்மையை சீண்டிப் பார்க்கும்போது எதிர்த்து போராட இயலாத பெண்ணிடம் மௌனம் மகரந்தச் சேர்க்கை செய்யும். பொய்மையை முலாம் பூசிக்கொண்டு நிற்கும். அமைதியாய் இருந்தால் அடங்கிப் போய்விட்டதாகத்தானே அர்த்தப்பட்டுப் போகிறது. அந்த அர்த்தங்களின் விசுவரூபம் உதாசீனப்படுத்தப்படும்போது இன்னொரு சுனாமி வாசலுக்கு வந்து வாய்க்கால் வெட்டுகிறது என்பதை எத்தனை பேர் அறிவர். பெண்ணின் உணர்வறிந்து மொழியறிந்து மனமறிந்து வலியறிந்து எவனொருவன் தாங்கிப்பிடிக்கிறானோ அவன் யாதுமாகி நிற்கிறான். பெண்ணின் எதிர்பார்ப்புகளை உதாசீனப்படுத்துபவன் தண்டிக்கப்படுகிறான். எப்படி என்று கேட்டுவிடாதீர்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கே தெரியும். உலகம் ஆயிரம் சொல்லும். அது வெறும் கணிப்புதான். உண்மை என்னவென்பது அறிந்தவனுக்கே தெரியும். கண்கெட்ட பிறகா சூரிய நமஸ்காரம். கண்களை மூடி தன்னை உணர்ந்தால், தான் செய்வது சரியா தவறா என்பது புரியாதா. புரிந்துகொண்டால்தானே மனித ஜென்மம். இதுக்கெதற்கு அக்னி பிரவேசம். ரசிப்பதும் ரசிக்கப்படுவதும் எந்த அளவுக்கு சுகமோ அதைப்போல் உதாசீனப்படுத்துவதும் உதாசீனப்படுத்தப்படுவதும் பன்மடங்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதை அறிந்துகொள்ளுங்கள். வணங்காமுடியாய் வாழ்ந்து வாழ்வை இழப்பதைவிட வளைந்துகொடுத்து வாழ்ந்து வாழ்வை வளைத்துக் கொள்ளுங்கள். உங்கள் கண்ணசைவுக்கு எல்லாமே காத்திருக்கும்.

Tuesday, July 5, 2011

விதியா..சதியா..

நீ விட்டுச் சென்றதும் உனை விட்டுச் சென்றதும்  அறிவாயா.  கல்லாகிப் போனதா நெஞ்சம். உன் கூட்டை நீயே கலைத்துப் போடவா வாழ்வை வரம் வாங்கி வந்தாய். கட்டிலை வீசினாய் கட்டியவன் காணாமல் போனான் தொட்டிலை  வீசினாய் தொலைந்து போனதே நீ தூக்கி சுமந்த சுகங்கலெல்லாம். அது நீ தேடிக்கொண்ட வினையா. அல்லது தேடிப்போன வினையா. உன் சுமையை யார் முதுகில் ஏற்றிவிட்டு யார் சுமையை நீ சுமக்க ஓடோடிப்போனாய்.  உன் சுவாசக்காற்றை சுகிக்க முடியாமல் தன் சுவாசக் காற்றை நிறுத்திக் கொண்டதே நீ பெற்றெடுத்த ஒரு திங்களைக்கூட முழுமையாய்க் காணாத பச்சிளங் குழந்தை. எந்த கங்கையில் இந்தப் பாவத்தைக் கழுவப் போகிறாய். கழுவினால் கழன்று போகுமா நீ சேர்த்து வைத்த பாவச் சுமை. வருடங்கள் ஓடிப்போனாலும் உன்னைப் பற்றிய உண்மைகளை உரசிப் பார்த்து தரம் பிரித்துக் காட்டி தரிசு நிலமாய் நீ கிடப்பதை ஏளனமாய் சொல்லிச் சிரிக்கிறார்களே உன் பெண் பிள்ளைகள். அந்த சிரிப்புக்குள் மின்மினிகளாய் மின்னிக்கொண்டிருக்கும் துக்கங்களும் சோகங்களும் பின்னிக்கொண்டு தோரணங்கட்டி ஆடுவதை அறிவாயா நீ. அவர்களின் மனதுக்குள் குமுறிக்கொண்டிருக்கும் வெருப்புத்தான் என் கண்களுக்குத் தெரிந்தது. அன்று வாழ வைக்க வேண்டிய பெண்களின் வாழ்க்கையை வழிமறித்து பரிதவிக்க விட்டது எதற்காக. ஞாயத்தராசில் உன்னைத் தூக்கி வைத்து கேள்வி கேட்கிறார்களே இன்று என்ன பதில் சொல்லப் போகிறாய். பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்பார்கள். ஆனால் உன் விஷயத்தில் பெற்ற மனமே கல்லாகிப் போனது. விதி வழி ஓடினாய். விதைத்ததை அறுவடை செய்யும் காலம் வந்து விட்டதை அறிவாயா. தாய்மடிக்காக தவமிருந்த தங்கங்களைத் தாரைவார்த்து விட்டு எவன் வீட்டு கிளியையோ வளர்க்க உன் வாழ்க்கை முழுவதையும் கூட்டுக்குள் வைத்து பூட்டிக்கொண்டாயே உனக்கு சிலை வைப்பான் என்று மனப்பால் குடித்தாயா. பார்த்தாயா நீ ஊற்றிய பாலைக் குடித்துவிட்டு இன்று உன்னைப் பாடைக்குள் வைத்து பழிதீர்க்க கருநாகமாய்க் காத்திருப்பதை. கட்டாந்தரையில் படுத்துறங்கி கட்டுக்கட்டாய் சேர்த்து வைத்தப் பணமே உன்னைக் குறிபார்த்து கத்தி முனையில் நிறுத்தியுள்ளது. இப்போதுகூட உன் சொத்துக்குள் குளிர்காய வரவில்லை நீ பெற்ற செல்வங்கள். அழகான ஆயுட்காலத்தை அலங்கோலப்படுத்தினாலும் நீ அநாதையாய் நிற்கும் அவலத்தைத் துடைத்தெரிய உன் முன் கைநீட்டி நிற்கிறார்களே. இன்னுமா உனக்குப் புரியவில்லை. அல்லது புரியாததுபோல் பாசாங்கு செய்கிறாயா. உன்னையே முலாம் பூசிக்கொண்டு மறைந்திருப்பது ஏன். தராசில் ஏறி நின்றால் நீ நிற்கும் தட்டு கீழே இறங்கிவிடும் என்ற பயமா. தோற்றுவிடுவோம் என்ற அச்சமா. நீதான் எப்போதோ தோல்விக்கு துணைபோய்விட்டாயே. தோல்வியே நீயாகிப்போன பிறகு உனக்கெதற்கு முகமூடி.