Saturday, March 5, 2011

வஞ்சகன் கண்ணனடி

காலம் இணைத்ததைக் காலமே பிரித்தது. மீண்டும் இணைவோம் என்று ஒருபோதும் நினைக்காத வேளையில் நிஜமாகவே இணைந்தோம். விட்டுப்போன தொடர்பு மீண்டும் கைகோர்த்தது. காய்ந்துபோன நினைவுகளுக்கு நீர் தெளித்து மீண்டும் பசுமைப்படுத்தி படரவிட்டோம். பொக்கிஷமாய் பூட்டிக்கிடந்த நிகழ்வுகளின் பூட்டுடைத்து மீண்டும் ரசித்துப் படித்தோம். ஓய்வு பெறும் வரை ஒன்றாக உழைத்திருப்போம் என்று ஆனந்தமாய் ஆய்வு நடத்தினோம் .ஆனால் பூநாகமாய் புறப்பட்ட  பதினைந்து புல்லுறுவிகள் நீட்டிய  ஓலை  உனக்கும்  எனக்கும் இடையே திரை போட்டு வேடிக்கை பார்க்கிறது. உன் ஆழ்ந்த அறிவை அடையாளம் காண முடியாத முள்ளம்பன்றிகளின் முதுகில் சவாரி செய்துவிட்டாயே. அவை உன்னைக் கடித்துக் குதறிவிடும் என்பதனால் தூக்கி எறியப்பட்டாயா. துவண்டுவிடாதே தோழி. தூறலைக் கண்டு துவண்டு விடாதே. தொடர்ந்து செல். அடைமழை வந்தாலும் தொடர்ந்து செல். நீ விட்டுச் சென்ற நினைவுத் துளிகள் இங்கே சிதறிக் கிடக்கின்றன. அவற்றை எடுத்துக்கோர்க்க மீண்டும் வா. வரண்டு விட்டது பாலைவனம் என இறுமாப்போடு பல்லிளித்த வஞ்சகர் களின் பற்களைப் பிடுங்கி உன் சோலைவனத்துக்கு உரமாக்கு. எழுதிய தீர்ப்பைத் திருத்தி எழுத யாருக்கு உண்டு தைரியம் . ஆனால் உனக்கு உண்டு பெண்ணே. உன்னிடம் எனக்குப் பிடித்ததே அந்த தைரியம்தான். பிடிக்காததும்கூட உண்டு. உன் கோபம். கோபம் தலைக்கேறியதும் வந்துவிழும் வார்த்தைகள். அவை உன்னை நிதானமிழக்க வைக்கிறது என்பதை நீ அறிவாயா. இன்னும்கூட உண்டு தோழி. நீ உண்ணும்போது  ஊர் பிரச்சனையெல்லாம் உன் பிரச்சனையாக எண்ணி உணவோடு சேர்த்து விழுங்குவது. உணவு மட்டும்  உன் உடலுக்குள் செல்லவில்லை ஊரில் உள்ள பிரச்சனைகளும் உன் உடலுக்குள்  இரத்தத்துக்குள் கலக்கின்றது என்பதை நீ ஏன் அறியாய். அது உனக்கே ஊறு விளைவிக்கும். அதனால்தான் பல முறை உன்னைத் தடுத்திருக்கிறேன் என்பதை நீ அறிவாய். எது  நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கின்றதோ அதுவும் நன்றாகவே நடக்கின்றது. எது நடக்குமோ அதுவும் நன்றாகவே நடக்கும். இதை நான் சொல்லவில்லை. சொன்னதும் கண்ணனடி.