Wednesday, May 25, 2011

பிரியாவிடை

வணக்கம். இந்தக் கீற்று உங்களுக்கு சமர்ப்பணம். உடைந்துபோன சில்லுக்களாய் சிதைந்துபோகும் முன் தாங்கிப் பிடித்து தடவிக்கொடுத்தது உங்கள் வார்த்தைகள். ஓடி ஓடி ஓய்ந்துபோய் சோர்ந்து வந்த நேரம் இதழ் பிரித்து வெளி வந்த தேன்துளியாய் என் உச்சி முகர்ந்து கைகுலுக்கியது உங்கள் சொற்கள். கரம் குவித்து கவி பாடி என்னை நெகிழச் செய்தன உங்கள் வாழ்த்துகள். எத்தனை ஆழமாய் என்னைப் படித்துள்ளீர்கள், இரசித்துள்ளீ ர்கள், மதித்துள்ளீர்கள் என்பதனை அறிந்தபோது ஆச்சரியம் என்னை ஆட்கொண்டது. அறிமுகப் படுத்திய நாட்களை அழகாக அச்சுக்கோர்த்து நாட்குறிப்பேட்டில் சேர்த்து வைத்ததை எனக்குப் படம் பிடித்துக் காட்டினீர்கள். நட்பின் ஆழத்தை அளந்து காட்ட முயற்சித்து அளவுகோல் போதாமல் திக்குமுக்காட வைத்தீர்கள். தூய நட்பு என்றுமே தூர்ந்துபோகாது என்று துவைத்துப்போட்ட துயரங்களைத் தூக்கி எறியச் சொன்னது உங்களன்பு. உலர்ந்து போனது உடலா உள்ளமா என்று அறியும் முன் என் சோர்வுகளைத் துறவு கொள்ளச் செய்தது உங்கள் உல்லாச வரவேற்பு. குலு குலு அறையின் கதவைத் திறந்ததும் என்னை வரவேற்ற என் பெயர் உங்கள் அன்பின் முகவரியைச் சொல்லாமல் சொல்லிப் போனது. எனக்கே தெரியாமல் சேர்த்து வைத்த என் வரிகளுக்கு வடிவம் கொடுத்த போது என் விழியோரம் துளிர்த்த நீர்த்துளியை இமைகள் மறைத்தன. அன்று வந்திருந்த குழந்தைகள்கூட என்னுரை கேட்டு கண்ணீர் சொரிந்த போது என் பதிவுகளின் சுவடுகள் அவர்களின் மனதிலும் பட்டா போட்டிருப்பதைக் கண்டு மனம் கலங்கினேன். நான் நலம் வாழ வாழ்த்தியதும்  என் வருகைக்காக வாசல் திறந்து வைத்து காத்திருப்பதும் காணும்போது மனசு மகிழம்பூவாய் மணக்கிறது. நான் வந்ததும் போனதும் வெறும் கானல் நீராய் இல்லாமல் கல் வெட்டாய் பதிந்துள்ளது என்பதனை அறியும் போது உள்ளம் மத்தாப்புக் கொளுத்தி மகிழ்ந்து போகிறது. இறைவனின் கட்டளை என்னவென்று புரியும்வரை காவலாய் நிற்கிறது காலம் இங்கே.