Monday, May 2, 2011

வானம் வளையும்

சக்கர நாற்காலியில் நீ வளம் வர சுமையே சுகமாய் மொத்த குடும்பமும் உன்னைச் சுற்றி சேவகம் செய்ய காலம்  காத்துக்கிடக்கிறதா இல்லை காலனைக் காக்க வைத்துவிட்டாயா. முதல் முறை என் விழிகளைச் சந்திக்கத் திராணியில்லாமல் உன் விழிகள் தலை சாய்த்துக் கொண்டதும் ஏதோ ஒரு கோபம் உன்மேல் எனக்கு வந்து போனது உண்மைதான். ஆனால் உன் வேகமும் விவேகமும் என்னை சற்று உரசிப் பார்த்தப்போது என் கோபம் தானாகக் கழன்று போனது. உன் தாயும் தந்தையும் நாள்முழுக்க உனக்காகக் கைகட்டி இங்கே காத்துக் கிடக்க எந்த சலனமும் இல்லாமல் நீ உன் நண்பர்களோடு சகஜமாய் சந்தோசமாய் காலத்தைச் சாய்த்துப் பிடித்துக் கண்ணடிக்கிறாயே அது எப்படி.  இரண்டு மாதக் குழந்தையைத் தோள் மீதும் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் உன்னை மார்போடும் சாய்த்துக்கொண்டு இங்கே தவமாய் தவம் கிடக்கும் தாய்மையை என்னவென்று சொல்வது, காலம் உன்னைக் கட்டிப் போட்டாலும் அங்கேயே சுருண்டு கிடக்காமல் கட்டவிழ்த்து வீசி விட்டு எழுந்து அமர்ந்து ஆர்ப்பரிக்கும் நீ எழுந்து நிற்க உன் சக்தி முழுதும் திரட்டு.  சாதித்தவர்களின் பட்டியலைத் தேடு.  வல்லமை தர வேணடி வானுலாவ நடந்துபோ. வானம் உனக்காக வளைந்து வரும்.