Thursday, August 11, 2011

சிவராத்திரியானது

என்னை நடுங்க வைத்த இரவு அது. பக்கத்தில் யாருமில்லை. ஊசிவிழுந்தால் கூட கேட்கும் என யாரோ சொன்னது அன்று நிரூபனமானது. வாங்கி வந்த ரொட்டி என் பசியைத் தீர்த்தது. என்ன செய்வது என்று தெரியாமல் அடிக்கடி என் கண்கள் கடிகார முள்ளைப் பார்த்தது. கடிகார முள் நகர மறுத்து என்னை எரிச்சலூட்டியது. நேரம் நத்தையாய் நகர்ந்தது. தனிமை தூக்கத்தைத் துண்டித்தது. வெளியில் மழை தூரல் போட்டுக்கொண்டிருந்தது. மணி ஒன்பதைக் காட்டியது. படுக்கையில் சாய்ந்தவாறு புத்தகத்தைப் புரட்டத் துவங்கினேன். தினம் இரவில் தூங்குவதற்கு முன் புத்தகம் படிப்பது வழக்கம். ஆரம்பத்தில் தூங்குவதற்கு முன் படித்தால் தூக்கம் ஆழ்ந்து வருவதாய் உணர்ந்தேன். நாளடைவில் அதுவே பழக்கமாகிப்போனது. கண்கள் சொருக ஆரம்பித்ததும் சுற்றி இருந்த விளக்குகளை அப்படியே எரியவிட்டு அறை விளக்கை மட்டும் அணைத்துட்டு உறங்கிப் போனேன். திடீரென என்னை எழுப்பிவிட்ட இடியோசை கொஞ்சம் நடுங்க வைத்தது. அதைத் தொடர்ந்துவந்த அடர்த்தியான மழை மின்னலோடு அடிக்கடி வந்த இடியோசை கொஞ்சமல்ல அதிகமாகவே என்னைப் பயமுறுத்தியது . எழுந்து கடிகாரத்தைப் பார்த்தேன். சரியாக மணி பன்னிரண்டு. மறுவினாடியில் இடித்த இடியில் எங்கும் ஒரே இருட்டு. மின்சாரம் தடையானது. எங்கு என்ன இருக்கிறது என்றே தெரியவில்லை. இரத்தமே உரைந்து விடுவதைப்போல் இருந்தது எனக்கு. தட்டுத் தடுமாறி மெழுகுவத்தியை ஏற்றி வைத்துக் கொண்டு படுத்தேன். மழை சத்தம் தலைவலியை உண்டுபண்ணியது. ஒரே புழுக்கம். அந்த மழை நேரத்திலும்கூட என் கழுத்திலிருந்து வழிந்த வியர்வை தலையணையை ந்னைத்துக்கொண்டிருந்தது. காரணம் புழுக்கமா பயமா என்று தெரியவில்லை. அந்த நடுக்கம் தூக்கத்தைத் தூர விரட்டி விட்டது. நான் குடியிருந்த வீட்டுக்கு எதிர்த்த வீட்டில் குடியிருந்த மலாய்க்காரர் நடுநிசியானதும் பேய் ஓட்டுவது அவரது வழக்கம். அன்று இரவும் அந்த பயங்கரம் நடந்தது. மழை சத்தத்தையும் மீறிக்கொண்டு ஒரு பெண் அலறும் சத்தம் என் செவிப்பரைகளைக் கிழித்தது. அந்த சத்தம் என் பயத்தை மேலும் கூட்டியது. சாமி மேடையில் வைத்திருந்த ருத்திராட்ச மாலையை எடுத்து என் கழுத்தில் அணிந்து கொண்டு கொஞ்சம் பஞ்செடுத்து இரண்டு காதுக்குள்ளும் திணித்துக்கொண்டு கண்களை இருக மூடிக்கொண்டேன். அந்த இரவு முழுவதும் மழையும் நிற்கவில்லை. மின்சாரமும் வரவில்லை. உறக்கமும் வரவில்லை. அன்று இரவு சிவராத்திரியானது எனக்கு. மறுநாள் காலையில் காதில் இருந்த பஞ்சை தூக்கி வீசியபோது சிரிப்பு வந்தது. நடுக்கம் போனது.