Tuesday, May 8, 2012

அஜான் ஸ்ரீபானோ

அஜான் ஸ்ரீபானோ. ஒரே நாளில் உலகின் விழிபடலத்துக்குள்லெல்லாம் நுழைந்து கருவிழிக்குள் கவிதை பாடிய அன்பின் திருவுருவம் நீ. ஊருக்கே அன்னமிடக்கூடிய அட்சயப் பாத்திரம் தந்தையின் கையில். இரந்துண்டு வாழும் அன்னப்பாத்திரமோ மகனின் கையில். எப்படி...? கோடியில் புரளவேண்டிய கோமேதகமல்லவா நீ. எதுவுமே எட்டித் தொட முடியாத அளவுக்கு இமயத்தின் உச்சியில் அமர்ந்துவிட்ட உன்னை இனி கோடி என்ன... கோமேதகமென்ன.... எதுவுமே அசைக்க முடியாது என்பதை நிருபனமாக்கிவிட்டாய். ஆன்மீகம் என்ற போர்வையில் கோடிகளைக் குவித்துக் கொண்டிருக்கும் பல அரலி விதைகள் உன்னைப் பார்த்தாலே முளைவிட முடியாமல் மண்ணுக்குள்ளேயே முகத்தைப் புதைத்துக் கொள்ளும். உலக மாயையை விலக்கிய உண்மையின் திருவுருவம் நீ. கதைகளிலும் காவியங்களிலும் உன் போன்ற கதைகளைப் படித்ததுண்டு. அப்போதெல்லாம் இது கற்பனையின் வடிவத்துக்கு முலாம் பூசப்பட்டுள்ளது என்ற எண்ணம் எனக்குத் தோன்றியதுண்டு. உமது வரவைக் கண்ட பிறகுதான் பணமும் பதவியும் பஞ்சணையாய் இருந்தும் கூட சலனமில்லாமல் சலிக்கப்பட்ட விலை மதிக்க முடியாத ஆன்மாவும் இவ்வுலகில் இன்னும் பிறப்பெடுத்துக்கொண்டுதான் இருக்கிறது என்பதை உணர்ந்து உள்ளம் சிலிர்த்தேன். தங்கத் தட்டில் தாம்பூலம் தர தந்தை தயாராய் இருந்தும் அதனைத் தட்டிவிட்டு திசை மாறிய உமது திருப்பாதங்களுக்கு ஒரு வேண்டுகோள்..... அன்பே ஆடையாய்க் கொண்டு அனைத்தையும் துறந்ததைப்போல் பிறவியே வேண்டாமென பிறப்பறுத்து சென்று விடாதீர்.. நானே கடவுள் என நெஞ்சை நிமிர்த்துக் கொண்டு பணத்தைக் குறிவைத்து மனிதனை அறுவடை செய்து வித்தை காட்டும் அவலம் இங்கே மலிந்துவிட்டது.