Saturday, February 16, 2013

உன் விழியில் என் பார்வை

மலை உச்சியிலிருந்து விழும் அருவியைப் பார்க்கும் போதெல்லாம் திகைப்போடு மலைத்திருக்கிறேன். அதன் மூலத்தைப் பார்க்கும் ஆவல் எனக்குள் ஏற்படும். இந்த நீர் எங்கிருந்து ஊற்றெடுத்து எப்படி வருகிறது என எனக்கு நானே கேட்டுக்கொள்வேன். என்றாவது ஒரு நாள் அதனைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று என் மனதுக்குள் நினைத்துக் கொண்டதுண்டு. பார்த்தேன். அந்த அற்புதக் காட்சியைப் பார்க்கும் வாய்ப்பு கும்கி திரைப்படம் எனக்கு வழங்கியது. விடுமுறை நாள்களில் பொழுது போக்க என்ன செய்வது என்று யோசிக்கும்போதெல்லாம் என் குடும்பத்தார் சட்டென்று யோசனை வழங்குவது திரையரங்கம்தான். ஆனால் கும்கி திரைப்படம் வெளியானபோது யோசிக்கவேயில்லை. காத்திருந்து விரைந்து சென்று பார்த்தோம். படம் பார்க்கும் ஆவலைவிட கலையுலகின் முடிசூடா திலகத்தின் வாரிசு எப்படி இருக்கும் என்ற ஆவலே அதிகமாக இருந்தது. அதுவும் பாடல் வெளியீட்டு விழாவைப் பார்த்த பிரமாண்டம் யானையின் இரு தந்தங்களயும் பற்றிக்கொண்டு நெற்றிப்பொட்டில் முத்தமிடும் காட்சி அமர்க்களப்படுத்தியது. அப்படத்தில் கதாநாயகனும் கதாநாயகியும் சந்திக்கும் ஒரு காட்சி. அந்தக் காட்டின் அழகும் அந்த அழகுக்கே மகுடம் தரித்ததைப் போல் அமைந்த கொட்டும் அருவியும் என் நெடுநாள் கனவுக்குள் நுழைந்து தெரித்து ஓட ஆரம்பித்தது. அந்தக் கொட்டும் அருவியின் மலை உச்சியில் போய் பார்க்க வேண்டும் என்று சின்ன வயசுல அம்மாவைக் கேட்டேன் என்று அவள் தன் ஆவலை வெளியிட்டபோது யாருக்கும் சொல்லாத என் ஆசையும் மொட்டவிழ்த்துக் கொண்டு நின்றது. உயரத்திலிருந்து வெள்ளை வெளேரென்று கொட்டும் நீரிலிருந்து தெரித்துக் கிளம்பும் நீர்ப்புகை சில்லென்று எங்கும் பரவ கீழிருந்து மெதுவாக காமிராவை நகர்த்தி அருவியின் உச்சிவரை கொண்டு செல்லும் காட்சிக்குள் நானும் மூழ்கி எழுந்தேன். நானே காமிராவின் கண்களாய் மாறிப்போனதாய் உணர்ந்தேன். காணக்கிடைக்காத காட்சியை நேரில் காண்பதைப் போல் புலகாங்கிதம் எனக்குள். நான் நேரில் பார்க்க ஆசைப்பட்ட பார்க்க முடியாத காட்சிகள் என் கண் முன் விரிந்து நிற்பதைக் கண்டு பிரபிப்போடு பூரித்துப் போனேன். அந்தப் பட இயக்குனர் பிரபு சாலமனுக்கு நன்றி. காட்சியை அற்புதமாய் பதிவு செய்த ஒளிப்பதிவாளருக்கு மிக்க நன்றி