Monday, July 11, 2011

யாதுமாகி நில்

பெண் அடங்கிப்போவாள் அன்புக்கு. அடக்கியாள நினைப்பவரை அடக்கி முடக்கிவிடுவாள். தனக்கு அடங்கிவிட்டாள் என்று நினைக்கும் ஆணுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். பெண் மௌனமாய் இருந்தால் அடங்கிவிட்டதாக அர்த்தமில்லை. பெண்மையை சீண்டிப் பார்க்கும்போது எதிர்த்து போராட இயலாத பெண்ணிடம் மௌனம் மகரந்தச் சேர்க்கை செய்யும். பொய்மையை முலாம் பூசிக்கொண்டு நிற்கும். அமைதியாய் இருந்தால் அடங்கிப் போய்விட்டதாகத்தானே அர்த்தப்பட்டுப் போகிறது. அந்த அர்த்தங்களின் விசுவரூபம் உதாசீனப்படுத்தப்படும்போது இன்னொரு சுனாமி வாசலுக்கு வந்து வாய்க்கால் வெட்டுகிறது என்பதை எத்தனை பேர் அறிவர். பெண்ணின் உணர்வறிந்து மொழியறிந்து மனமறிந்து வலியறிந்து எவனொருவன் தாங்கிப்பிடிக்கிறானோ அவன் யாதுமாகி நிற்கிறான். பெண்ணின் எதிர்பார்ப்புகளை உதாசீனப்படுத்துபவன் தண்டிக்கப்படுகிறான். எப்படி என்று கேட்டுவிடாதீர்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கே தெரியும். உலகம் ஆயிரம் சொல்லும். அது வெறும் கணிப்புதான். உண்மை என்னவென்பது அறிந்தவனுக்கே தெரியும். கண்கெட்ட பிறகா சூரிய நமஸ்காரம். கண்களை மூடி தன்னை உணர்ந்தால், தான் செய்வது சரியா தவறா என்பது புரியாதா. புரிந்துகொண்டால்தானே மனித ஜென்மம். இதுக்கெதற்கு அக்னி பிரவேசம். ரசிப்பதும் ரசிக்கப்படுவதும் எந்த அளவுக்கு சுகமோ அதைப்போல் உதாசீனப்படுத்துவதும் உதாசீனப்படுத்தப்படுவதும் பன்மடங்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதை அறிந்துகொள்ளுங்கள். வணங்காமுடியாய் வாழ்ந்து வாழ்வை இழப்பதைவிட வளைந்துகொடுத்து வாழ்ந்து வாழ்வை வளைத்துக் கொள்ளுங்கள். உங்கள் கண்ணசைவுக்கு எல்லாமே காத்திருக்கும்.