Tuesday, August 2, 2011

இரகசியமாய்..

மனதோடு விளையாடி மறைமுகமாய் எனைத் தேடி மயிலுருவில் வந்த பேரழகே. உருக்கொண்டு சிறகெடுத்து வருடிவிட்டு சென்றாலும் நீ சென்ற திசை பார்த்து இமைக்காமல் விழியசைய மறுக்குதையா இங்கு. மௌனமாய் நான் அமர்ந்து மனம் அடங்கி உடல் மறுத்த வேளையெல்லாம் உள்ளூர நீ வந்து இறகாலெ எனை வருடி சென்றுள்ளாய் என்பதை உனை பார்த்த பின்புதான் புரிந்துகொண்டேன். நீலத்தில் பசுமையும் பசுமைக்குள் நீலமும் எனை வந்து ஆட்கொண்ட போதெல்லாம் பல கேள்வி நான் கேட்டும் விடையேதும் காணாமல் முனகலோடு நின்றது என் மூச்சு. முடிவென்பதிங்கில்லை முடிச்சுக்கள் பல உண்டு நீயாக முடிச்சவிழ்த்துப் பார் என பக்கத்தில் வந்தாயா. படியளக்க வந்தவனே...நான் அளந்த படியை நீ உண்டு செல்லவா எனைத் தேடி வந்தாய். இரை தேடி வந்தாயா இறையாகி வந்தாயா. நீ வந்ததும் அதிர்ஷ்டம் உன்னைத் தேடி வந்துவிட்டதென ஊரெல்லாம் சொன்னபோது ஆகாயமே எனைத்தேடி வந்ததாய் உடல் கூச நின்றேன். உனைப்பிடித்து கூட்டுக்குள் அடைத்துவிட துடிக்கின்றது மனிதம். கூட்டுக்குள் அடைபடவா சிறகு வாங்கி வந்தாய். அதுதான் மனிதனின் சித்தம் என்றால் அதற்கும் அல்லவா வழிவிட்டு வேடிக்கை பார்க்கிறாய். உனை உணர்ந்தவர்க்கு மட்டுமே புரியும் நீ வைக்கின்ற புள்ளியில் கோலமிடும் இரகசியம். மீண்டும் ஒரு முறை சிறகெடுத்து வா அழகே உன் இறகுக்குள் இளைப்பாற நான் வர வேண்டும்.