Tuesday, August 13, 2013

தூக்கம் உன் கண்களை...

தூக்கம் தூர்ந்து போனால் துக்கம் தொட்டில் கட்டும். துவண்டு விழும் தேகத்தை தூக்கிப் பிடிக்க  முடியாமல்  உடல் உபாதைகள் உருட்டி விளையாடும். மனதை மல்லாக்கா படுக்க வைத்து பாண்டி ஆட முயற்சிக்கும். பட்டு மெத்தையில் படுத்தாலும் இமைகளை மூடியதும் உறக்கம் வர மறுத்தால் உள்ளம் ஊர் சுற்ற ஆரம்பிக்கும். எவ்வளவு நேரம் ஊர் சுற்ற முடியும். உள்ளம் களைத்துப் போகும்போதுதான் உனக்கே தெரியாமல் உள்ளத்தை உளைச்சல் விளைச்சல் செய்யும். உளைச்சலின் விளைச்சல் அதிகரிக்க அதிகரிக்க மனம் மூளையைக் கட்டிப் போடும் வித்தை கொஞ்சம் கொஞ்சமாக அரங்கேறும். யாருக்கும் தெரியாமல் உருவாக்கப்படும் இந்த அத்தியாயம் நோயாக உருப்பெறும் முன் பக்கத்தில் உள்ளவர் உண்மையை உணர்ந்து புத்திசாலித்தனமாக பாதிக்கப்பட்டவரைக் காப்பாற்றினால்தான் உண்டு. இல்லையேல் அதன் விளைவு மனதை அழித்து.. உடலை அழித்து.. வாழ்க்கையை சீர்குலைத்துவிடும். மீண்டு வர முடியாத வேரோர் உலகத்தில் வாழ்க்கை தடம் புரண்டு தள்ளாடிக்கொண்டிருக்கும். எத்தனையோ பேர் இந்த இக்கட்டில் மாட்டிக்கொண்டு தவித்துக் கொண்டிருப்பதை நாமே பார்த்திருப்போம். கட்டாந்தரையில் படுத்தாலும் உடனே உறங்கிப் போகும் அன்பர்கள் இந்த வேதனையை உணர்ந்திருக்க சந்தர்ப்பமில்லை. பிரச்சனைகளை உண்டு வாழும் உள்ளங்கள் எவ்வளவுதான் சொகுசாகப் படுத்தாலும் உறக்கம் விலகிப் போகும்போது  அது வேரொரு சிக்கலுக்குக் கதவைத் திறந்து வைக்கிறது என்பதைப் பாதிக்கப்பட்டவர் உணர்வதில்லை. அதனால் தூக்கம் தூரப் போகும் போதெல்லாம் மூலத்தை அறிந்தால் தொல்லைகளை அறுத்து இன்புற்று வாழ நாமே வழி தேடிக்கொள்ளலாம்.