Friday, February 25, 2011

மௌனமாய் இருந்துவிடு...



மௌனம்...... இயற்கை மனிதனுக்குச் சொன்ன மகத்தான விஷயம். பேசுவதை நிறுத்து. நினைவுகளை நிறுத்து. மௌனமாய் இரு. பத்து நிமிடம் உயிருள்ள பிணமாய் வாழ்ந்து பார். மனம் திறந்து கொள்ளும். இயற்கை உன் மனதோடு பேச ஆரம்பிக்கும். உன் உடலோடு பேச ஆரம்பிக்கும். இயற்கை தன் அற்புத சக்திகளை உன் உடலுக்குள் செலுத்தத் துவங்கும். யாரும் இல்லாத இடத்தில் அமைதியான சூழலில் உன் மனதைத் திறந்து மௌனமாய் அமர்ந்து வானத்தை உற்றுப் பார். வானம் உனக்கு வசப்படும். கோடி வெண்புள்ளிகள் வெளிச்சக் கூட்டமாய் உன்னைத் தேடி வரும். மனதை இழுத்து நிறுத்தினால் கண்களைத் திறந்து கொண்டே இக்காட்சியைப் பார்க்கலாம். அந்த வெளிச்சப் பிழம்பு முக்கோண வடிவில் உருமாறி உயிர் துடிப்போடு உன்னோடு தொடர்பு கொள்ளும். இயற்கையே குருவாக மாறி உன்னை வழி நடத்தும். மௌனமாய் இருந்து பார். காற்றும் மரமும் செடி கொடிகளும் மலரும் மண்ணும் மழையும் சொல்லும் இரகசியம் உன் காதுக்குள் கேட்கும். நீ தேடி நிற்கும் விஷயங்கள் யாவும் உன்னைத் தேடி வரும். மழையைப் பார்த்து ஓடி ஒளியாதே. குழந்தை தாய் மடியில் ஆசையாய்த் தவழ்ந்து அனுபவிக்கும் சந்தோசத்தைப் போல் மழையோடு உறவாடிப்பார். மழை உன்னைத் தண்டிக்காது; உன் உச்சி முகர்ந்து உள்ளொளி பெருக்கி உன்னை வாழ்த்திவிட்டுப் போகும். கோபத்தை மட்டுமே அள்ளித் தெளிப்பவரிடம் மௌனத்தை அன்பளிப்பாய் கொடுத்துவிடு. அவரது கோபம்கூட நிர்கதியாகிப்போகும். மௌனத்தை தாய்மொழியாய்க் கொண்டு மகாத்மாவாக மாறிவிடச் சொல்லவில்லை. மௌனம் உன்னை மனிதனாக மாற்றும். மனிதம் உன்னை மகாத்மாவாக மாற்றும். உன்னை உன்னை என்று நான் சொன்னதெல்லாம் உனக்கு மட்டுமல்ல. எனக்கும்தான். நான் கற்றதும் பெற்றதும் இதைப் படிக்கும் உன்னோடும் பகிர்ந்து கொள்கிறேன்.

நீதான்.....நீயேதான்

நீ இல்லாத பொழுதுகள், உன்னோடு பேசாத பொழுதுகள், உன்னைக் காணாத பொழுதுகள் நான் என்னோடு பேச ஆரம்பித்தேன். அவை கொஞ்சம் கொஞ்சமாக என் அடி மனதில் கவிபாட ஆரம்பித்தது. சேமித்த ஞாபகங்களை மீண்டும் மீண்டும் அசைபோடும்போது அவை என்னை வாசிக்க ஆரம்பித்தன. சிந்திக்க ஆரம்பித்தது என் உள்ள்ம். எப்படி என்ன செய்வதென்று புரியவில்லை. அன்று எப்போதும் வாங்கிப்படிக்கும் நாளிதழ் என் கையில் இருந்தது. சேமித்த ஞாபகங்களை வார்த்தைகளாகக் கோர்த்து அந்த நாளிதழுக்கு அனுப்பத் தூண்டியது மனம். ஆனால் அவை ஏற்றுக்கொள்ளப்படுமா உதாசீனப்படுத்தப்படுமா என்ற நெருடல் வேறு எனக்குள். யோசித்தேன். விண்ணப்பம் என்ற தலைப்பிட்டு அந்த நாளிதழின் ஆசிரியருக்கு ஒரு கடிதம் எழுதினேன்.  கடிதத்தோடு சேர்த்து என் முதல் கவிதையையும் அந்த நாளிதழின் முகவரிக்கு அனுப்பினேன். இருப்பினும் என் கவிதை பிரசுரத்திற்குத் தகுதியானதுதானா என்ற ச்ந்தேகம் எனக்குள் எழுந்துகொண்டே இருந்தது. ஆனால் அந்த வாரமே என் முதல் கவிதை உயிரைத் தேடி என்ற தலைப்பில் நாளிதழில் பிரசுரமானது. கவிதையை விட அந்தக் கவிதைக்காகப் போட்டிருந்த படம் என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு பெண் நீர் வீழ்ச்சியில் குளிப்பதைப் போலவும் அந்த நீர் வீழ்ச்சியிலிருந்து தெரிக்கும் நீர்த்துளிகள் அவள் முகத்தில் பட்டுத் தெரிக்கும் அழகும் மிகவும் அர்ப்புதமாக இருந்தது. என் கண்களையே என்னால் நம்பமுடியவில்லை. பல முறை கவிதையின் கீழிருந்த என் பெயரை உற்றுப் பார்த்தேன். என் முதல் கவிதை எப்படி உயிரைத் தேடி என்ற தலைப்பைப் பூண்டிருந்ததோ அதேபோல் அது என் உயிரை உரசிச் சென்றது. அன்று புதிதாய் ஒன்றை சாதித்த சந்தோசம் என் உள்ளமெல்லாம் பூத்திருந்தது. அதன் பிறகு என் முயற்சிகள் தொடர ஆரம்பித்தது. என் கவிதைக்கு வரிகள் எடுத்துக்கொடுத்தது நீதான். அதற்கு அடித்தளம் போட்டதும்  நீதான். நீயே தான்.  கவிதையின் வழி என் ச்ந்தோசங்களைச் சொன்னேன்; என் வேதனைகளைச் சொன்னேன்; என் பிரிவைக்கூட சொன்னேன் ஆனால் அவற்றுக்கு சிறகுக் கட்டி தேசத்தைச் சுற்றிப் பறக்க விட்டு அரங்கேறச் செய்த அந்த முதன்மை மனிதனுக்கு நன்றியைச் சொல்லவில்லை. அந்த நல்லவர் யாரும் வேண்டாம் எதுவும் வேண்டாம் என்று உலகையே உதறிவிட்டு தனது ஆதிக்கத்தை அஸ்தமனமாக்கிக் கொண்ட  பிறகுதான் ஒருமுறையேனும் நன்றியை நேரில் சொல்லி இருக்கலாமே என்ற ஆதங்கம் என் உள்ளத்தைப் பல முறை உறுத்தியுள்ளது.