Friday, February 4, 2011

உயிரை உயிராக்கிய அந்த நாள்

அப்போது இடைநிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன். வீட்டில் யாருமில்லை. மூன்று வயது தம்பி மட்டும் வாயில் பால் போத்தலுடன் என் பக்கத்தில். என் பள்ளியின் உயரம் தாண்டும் போட்டிக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதிக பயிற்சி மேலும் என்னைத் தரமாக்கும் என்று நினைத்தேன் என் வீட்டின் வரவேற்பறை பெரியதாக இருக்கும். நடு அறையில் இரண்டு உயரமான நாற்காலிகளை வைத்தேன். அதன் மேல் நீண்ட மூங்கிலை வைத்தேன். தூரத்திலிருந்து ஓடி வந்து தாண்டினேன். சந்தோசம் மனசெல்லாம். பள்ளியில் நடக்கவிருக்கும் உயரம் தாண்டும் போட்டியில் கலந்து வெற்றி காண முடியும் என்ற நம்பிக்கை மனதைப் பூரிக்க வைத்தது. ஆனால் மீண்டும் மீண்டும் தா.ண்டியதும் சிமெந்து தரை கால் வலிக்கச் செய்தது.தலையணை ஒன்றை கொண்டு வந்து மூங்கிலின் முன்புறம் போட்டேன். ஓடி வந்து மூங்கிலைத் தாண்டினேன்.... தரை மீது வைக்க வேண்டிய காலை தலையணை மீது வைத்தேன். சருக்கிய தலையணை கால் நீட்டிய வாக்கில் என் உடலை தரை மீது தள்ளியது. நின்றது மூச்சு.  அசையவில்லை உடல்.  நகரவில்லை விழி. இயங்கவில்லை இதயம். ஆனால்...என் வாழ்வில்அதுவரை  நடந்த அத்தனை சம்பவங்களும் குழந்தை பருவம் வரை திரைப்படக் காட்சியைப்போல் பின்னோக்கி ஓட ஆரம்பித்தது முன்கதவு உட்புறம் தாழ்ப்பாள் போட்டிருந்ததால் வெளியிலிருந்து யாரும் பார்க்கவும் வழியில்லை. உயிர் உடலை விட்டு வெளியேறும் தருணம் வந்துவிட்டதா? புரியவில்லை. நினைவுகளை ஒருமுகப்படுத்தி இறைவனிடம் சரணாகதி அடைந்தேன். மறுவினாடி என் மூன்று வயது தம்பி என்னருகில் வந்து அவனது பால் போத்தலில் இருந்த நீரை என் வாய்க்குள் ஊற்றினான். மீண்டும் மெல்ல மெல்ல மூச்சு வந்தது எனக்கு. நெஞ்சுக்குள் பயங்கர வலி. அப்போது என் அருகில் நின்றது குழந்தையா குருபரனா என்று சிந்திக்கத் தோன்றியது. அதன் பிறகு நெடுங்காலம் நெஞ்சுக்குள் இருந்த வலி போகவில்லை. நான் உயரம் தாண்டும் போட்டியில் கலந்துகொள்ளவும் முடியவில்லை. ஆனால் ஒருசில வினாடிகளில் என் குழந்தைப் பருவம் வரை பின்னோக்கி ஓடிய காட்சிகள் ஏன் ஏற்பட்டது? அந்த நிமிடம் எனக்குள் என்ன நடந்தது? இந்த தேடல் பல ஆண்டுகள் என்னைத் தொடர்ந்து வந்தது. எங்கிருந்தும் விடை கிடைக்கவில்லை. தேடல் ஆரம்பமானால் பதில் தேடிவரும் என்ற நம்பிக்கை மட்டும் என்னை விட்டுப் போகவில்லை.
நிறைய ஆன்மீக புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தேன். ஒரு நாள் எம்.எஸ்.உதயமூர்த்தியின் ஆத்ம தரிசனம் என்ற புத்தகத்தில் என் கேள்விக்கு விடை கிடைத்தது. அதிர்ந்து போனேன். அதில் உடலை விட்டு உயிர் பிரியும் தருணம் இந்த அனுபவம் ஏற்படும் என்று அறிந்தேன். என் விழிகளிலிருந்து நீர் வழிந்தது. இந்த அரியஅனுபவத்தை எனக்குத் தந்த்த இறைவனுக்கு நன்றி கூறினேன்.