Saturday, April 9, 2011

அழகாய் பூக்குமே

அன்புக்கும் அமைதிக்கும் அர்த்தம் சொல்லத் தெரிந்தவர்களுக்கு தங்களது சொந்த வாழ்க்கையில் மருந்துக்குக்கூட இந்த அத்தியாயத்துக்குள் நுழைய மறுப்பதேன். தன்னைச் சுற்றி ஒரு வேளி போட்டுக்கொண்டு அதற்குள்ளேயே சுருண்டு படுத்துக்கொண்டால் யாரால் எழுப்பமுடியும். தூங்குபவர்களை  எழுப்பிவிடலாம். தூங்குவதைப்போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்று சொல்வார்கள். இவர்களின் பேச்சும் போக்கும் சில சமயங்களில் எரிச்சலை மூட்டினாலும் பல சமயங்களில் அனுதாபத்தை ஏற்படுத்துகிறது. ஒரு வேளை இவர்கள்கூட மனநலமில்லாதவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவர்களா என்று எண்ணத் தோன்றுகிறது. ஆமாம் அதுதான்  உண்மை என பல ஆய்வுகள் காட்டுகின்றன. நாட்கள் நகரும்போது  பிரச்சனைகளை சமாளிக்கத் தெரியாதபோதெல்லாம் இவர்களின் மனமும் மறைமுகமாக பாதிப்புக்குள்ளாகி வருகின்றதென்று யாருக்குப் புலப்படும். இப்படிப்பட்டவர்களைப் பார்க்கும்போது இவர்களின் மீது எனக்குப் பரிதாபம்தான் ஏற்படுகின்றது. தனக்குத் தேவையானதெல்லாம் இருந்தும்கூட பிறரின் பொருட்களை எடுத்து மறைத்து வைத்துக்கொள்வதும் பிறரின் பொருட்களை தொலையச் செய்வதும் இவர்களை உள்ளூர ஆனந்தப்படுத்தும் ஓர் அற்பச் செயல். இப்படிச் செய்வதன் மூலம் பிறரைப் பழிவாங்கிவிட்டதாக இவர்களின் நினைப்பு. சம்பந்தப்பட்டவர்கள் தாங்கள் தொலைத்த பொருளைத் தேடி அலைந்து வேதனைப்படுவதைப் பார்த்துப் பூரித்துப் புலகாங்கிதம் அடைந்துவிடும் இவர்களின் மனது. ஆனால் பிறரின் பொருட்களை தொலைப்பதில் சுகம் காணும் இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தாங்களே தொலைந்துகொண்டிருப்பது இவர்களால் அறியப்படாத இரகசியம். இவர்கள் முழுமையாக தங்களைத் தொலைத்த பிறகுதான் இவர்களைச் சுற்றி உள்ளவர்களுக்கே உண்மை அறியப்படும். இப்படிப்பட்டவர்கள் உங்கள் மத்தியில் இருக்கலாம். உங்கள் நண்பர்களாக இருக்கலாம். உங்கள் வீட்டில்கூட இருக்கலாம். இவர்களின் செய்கையைப் பார்த்து வெறுத்து ஒதுக்கி விடாமல் தயவுசெய்து இவர்களின் முகத்திரையைக் கிழித்து வெளியில் கொண்டு வாருங்கள். நீங்கள் செய்யும் உதவியின் மூலம் அவர்களின் வாழ்க்கை மீண்டும் அழகாய் பூக்குமே.