Sunday, February 5, 2012

சுயமே நலமில்லை

ஏன் இந்த சுயநலம். எதற்கு இந்த சுயநலம். எங்கிருந்து வந்ததிந்த சுயநலம் எப்படிப்போனால் எனக்கென்ன என்ற போக்கு. எதை நீ கொண்டு வந்தாய் இழப்பதற்கு என்று கீதையில் கண்ணன் உபதேசிக்கவில்லையா. உபதேசத்தைக் கேட்கவில்லையா. பூமியின் நாட்கள் வளர வளர சுயநலம் என்ற விதை செடியாய் மரமாய் விருட்சமாய் வளர்ந்து எங்கும் படர்ந்து நிற்பதைப் பார்க்கும் போது...வலிக்கிறது. எல்லாம் எனக்கு மட்டும்... எல்லாம் நான் மட்டும்...என்ற எண்ணம் மட்டும் உதித்ததாலோ என்னவோ தன்னைத் தவிர தன்னைச் சுற்றி நடக்கும் வேறு எதுவுமே கண்ணுக்குத் தெரிவதில்லை. இவர்களுக்குத் தெரியுமா தான் வாழும் பொழுதின் மறு கனம் கூட சொந்தமில்லை என்பது. தான் என்ற ஆடையைக் கலைந்துவிட்டு தன்னை விடுத்து தனித்து நின்று புறக்கண்ணை மூடி அகக்கண்ணைத் திறந்து பார்த்தால் மட்டுமே இங்கிருக்கும் எதுவுமே தனதில்லை என்பது புரியும். ஆனால் எத்தனைப் பேருக்கு இந்த உண்மையை உணரும் அறிவு திறக்கப்பட்டுள்ளது ஒருசிலரைத் தவிர. நம்மைச் சுற்றி நடக்கும் அனைத்தும் கண்காணிக்கப் பட்டு வருவதும் எல்லாற்றுக்குமே வரவு செலவு இலாப நட்டம் அனைத்துமே பதிவு செய்யப்பட்டு வருவதும் உணராமல் இருக்கும் வரை இந்த மானிடப் பிறவிப் பயன் அறியாமல்தான் போகும். பதிவு செய்வது யார். இயற்கை என்ற மாபெரும் சக்தி. எந்நேரமும் கண்சிமிட்டிக் கொண்டிருக்கும் இந்த சக்தியல்லவா இறை. சுயநலத்தை விடுத்து பிறர் நலத்தை கொஞ்சம் திருப்பிப் பார்த்தாலே மானுடம் விழித்துக்கொள்ளும்.