Friday, November 4, 2011

செல்லமடா நீ எனக்கு


என்  உதிரத்தை  உணவாக்கிக்கொண்டு உடலை உரமாக்கிக்கொண்டு என் சுவாசத்தை நீ சுவாசித்து எனக்குள் பூத்த என் முதல் பூ நீ.  எனக்குள் நீ பூத்தபோது உன்னைத் தவிர வேறு எண்ணங்கள் எல்லாம் அருந்து போனது எனக்கு. உச்சி முதல் உள்ளங்கால் வரை உன் நினைவே என் உயிர் அணுக்களாக உயிர் வளியை அள்ளிக் கொண்டு என் உடல் முழுக்க ஓடியது. உன்னை முதன் முதலாய் என் கைகளில் ஏந்திய போது உலகில் உள்ள சந்தோஷத்தை எல்லாம் உருட்டி என் கண்களின் வழி ஆனந்தக் கண்ணீராய் ஓட விட்டவன் நீ. எனக்குள் ஆழமாய் தியானித்துக்கிடந்த நீ என்னைப் பிளந்துகொண்டு வெளியில் வந்தபோது என்னைப் பார்க்காமல் உன்னைப் பார்த்தன என் கண்கள். என் உடலில் உயிர் இருக்கிறதா என்று உணர்வதற்கு முன் உன் உடலில் உயிர் உள்ளதா என்று ஆராய்ந்தன என் விழிகள். அன்று எனக்கு ஏற்பட்ட பூகம்பம் என்னை சிதைக்காமல் உன்னை முத்தெடுத்துக் கொடுத்தது. உன் பிஞ்சு உடலைத் தொட்டுத்தடவியபோது நீயே இயற்கை எனக்குக் கொடுத்த உச்சக்கட்ட படைப்பாக எண்ணி உச்சி குளிர்ந்து போனேன். அன்புக்கு மட்டுமல்ல பண்புக்கும் நீயே உதாரணம். அழகுக்கு மட்டுமல்ல அறிவுக்கும் உன்னை அடையாளம் காட்டலாம். தூக்கத்தைத் துண்டித்து இரவுகூட உனக்கு விளக்கேந்தி நின்றதைப்  பார்த்து நெகிழ்ந்திருக்கிறேன். வெறித்தனமான உன் முயற்சியைக் கண்டு வியந்திருக்கிறேன். யாராவது முயற்சியின் முகவரியைக் கேட்டால் என் சுட்டு விரல் சட்டென்று நிமிர்ந்து உன்னைத்தான் பார்க்கும் உன் வெற்றியின் வளர்பிறையில்  நானும் உன்னோடு கைகோர்த்து வளர்ந்து வந்தேன். என் பலவீனங்களைப் பகையாக்கி பலத்தை உறவாக்கி உருமாற்றியவன்  நீ. என் சந்தோஷ சாம்ராஜ்யத்தின் தேர் நீ. உன் வயது வளர்ந்தாலும் இன்னும் பால் மணம் மாறாத பசும்பொன் நீ. இன்று மட்டுமல்ல என்றுமே செல்லமடா நீ எனக்கு.