Monday, February 24, 2014

விரிசலில் ஒரு புகைச்சல்



முன்புபோல் இல்லை. இங்கு எதுவுமே முன்புபோல் இல்லை. நமக்குள் விழுந்தது விரிசலா..இல்லை. அதற்கு வழியில்லை. ஏதோவொன்று  என்னை வாட்டுகிறது. உன்னையும் என்னையும் முடிச்சுப்போட்ட பகிர்வுகள் முன்புபோல் இல்லை. விடியற்காலையில் வணக்கம் கூறும் புன்னகை கூட இப்போது வறுமையின் வாசலில் திரைச்சீலையாகிவிட்டது. மூடித் திறந்த முக்காடு முனகலோடு காற்றில் பறக்க விட்டது யார் தவறு. சுண்டு விரலில் சுற்றி இழுக்க சுடச்சுட சொன்னேன்  வழியொன்று. புல்லுருவி பூக்கும் முன்பே பூச்சி மருந்து பூசச் சொன்னேன். கேட்கவில்லையே..நீ. நான் முன்னறிந்து சொன்னதை முற்றுப்புள்ளியாக்கிவிட்டு, உன் உள்ளத்தில் உள்ளதை உள்ளங்கையில் ஏந்தினாய். கலை எடுப்பதாய் எண்ணி உரம் போட்டு விட்டாயே. சேற்று நீரை அள்ளித் தெளித்த பிறகு எங்கிருந்து வரும் சந்தன வாசம். மனதுக்குள் விழுந்த கீறல் வடுவாகி போய்விடுமோ என்ற பயம் உனக்கு மட்டுமல்ல எனக்கும்தான். மடியேந்திய சந்தோஷமெல்லாம் மறக்கப்படவில்லை, மறுக்கப்பட்டுவிட்டது. காலம் மீண்டும் ஒரு முறை கவிதை படிக்குமா இல்லை எட்டி நின்று வேடிக்கை பார்க்குமா என்று தெரியவில்லை எனக்கு. உனது முடிவு எதை முடித்து வைத்ததென்று புரிகிறதா இப்போது. முழுமையாய் நனைந்த பிறகு முக்காடு விழுந்தால் என்ன, பறந்தால் என்ன.

Thursday, February 6, 2014

சூப்பர் சிங்கர் கண்டெடுத்த திவாகர்

 இரவு பதினோரு  மணியானதும் உறக்கம் என் கண்களை வருட முனைவது வழக்கம். ஆனால் பதினொன்றைத் தாண்டி விடியற்காலை நான்கு வரை காட்சியைக் கண்ணுக்குள் கட்டிப் போட்டது சூப்பர் சிங்கர் 4 ஆச்சரியம். இறுதிப்போட்டியில் இடம்பெற்ற ஐவரில் விழிகள் முதலில் தேடியதென்னவோ திவாகரைத்தான். ஆராரிரோ பாடியதாரோ...என்ற பாடலைப் பாடிய போது திவாகரின் தாய் மட்டுமல்ல, நீதிபதியாக பொறுப்பேற்றிருந்த சீனிவாசனின் கண்களிலும் கண்ணீர் வழிந்தோடச் செய்தது அந்தப் பாடலின் உருக்கம். என் கண்கள்கூட குளமானது அன்று. அந்தப் பாடலைத் தொடர்ந்து ஒளியேறிய திவாகரின் குடும்ப சூழலை விரித்துக் காட்டிய வீடியோ க்ளிப் என் கண்களில் குளம் கட்டிய கண்ணீர், மடை திறந்தது. திவாகர்   முதன் முறையாக தனது தாயை அறிமுகப்படுத்திய போதுதான்  அவரது வறுமையின் கலவை சேலை கட்டி நிற்பதை என்னைப்போல் எத்தனையோ பேருக்குத் தெரிய வந்திருக்கும். திவாகர் இசை மேல் கொண்ட காதல் வெறியும் தாயின்  இயலாமையும் போட்டிப்போட்டுக்கொண்டு சதுரங்கம் அடிக்கொண்டிருப்பதை அந்தந் தாயின் கண்ணீர் காட்டிக்கொடுத்தது. அந்தக் காட்சி சூப்பர் சிங்கர் 4 ஐத்  தொடர்ந்து பார்த்துக் கொண்டு வரும் பார்வையாளர்கள் அத்தனைப் பேரின் உள்ளங்களையும் கலங்கடித்தது. மக்களின் கவனத்தை ஈர்த்தது திவாகரின் வறுமை அல்ல, அதையும் வென்று நின்ற வறுமையை மிஞ்சிய திறமை.  திவாகரின் முயற்சி இன்றைய இளைஞனுக்கு மிகச் சிறந்த கல்வெட்டு. ஏதோ ஒரு மூலையில் எந்த அடிப்படை  வசதியும் இல்லாத வறுமையின் தாலாட்டில் வளர்ந்த ஒருவன் முயற்சியை மட்டுமே மூலாதாரமாக வைத்துக்கொண்டு திறமையின் உச்சியில் வெற்றிக்கொடி கட்ட புறப்பட்ட சாதனை என்னை அசர வைத்தது. திவாகருக்காகவே ஒவ்வொரு நாளும் என் சொந்த வேலைகள் பரண்மேல் அமர்ந்துகொண்டு  அந்நிகழ்ச்சியைப் பார்க்க  எனக்கு வழிவிட்டன. வகுப்பெடுக்காமல் பாமாலை இவனிடம் வசப்பட்டுக் கிடப்பதைக் கண்ட அஸ்கார் நாயகனின் புன்னகையே இவனது வெற்றியின் பூமாலை.  இறுதிச் சுற்றுக்கு திவாகர் தேர்வானதும் தரையில் விழுந்து முத்தமிட்டு ஆனந்தத்தில் புரண்ட காட்சி மேடையில் அமர்ந்திருந்த  அனைவரையும் மெய் மறந்து திவாகரை நோக்கி ஓடிவரச் செய்தது. பார்த்துக் கொண்டிருந்த எனது இரு கரங்களும் என்னைக் கேட்காமல் ஒலி எழுப்பி ஆர்ப்பரித்தன.  இறுதிச் சுற்றில் தேர்வாகி நின்ற மிக திறமை வாய்ந்த ஐந்து போட்டியாளர்களில் ஒருவராக திவாகர் நின்ற போது மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏந்தி நின்றது சூப்பர் சிங்கர். திவாகரின் திறமைக்கு சவாலாக அமைந்தது சய்யத் சுபாகானின் பாடும் திறன். அனைத்தையும் வென்று படியேறியது திவாகரின் ஆற்றல். ஜானகி அம்மா அவனை ஒரு குழந்தையைப் போல் முத்தமிட்டு உச்சி முகர்ந்த காட்சியில் ஒரே இரவில் வறுமை வற்றிப் போனது. முயற்சியும் திறமையும் சீர் எடுத்து வந்து சிம்மாசனத்தில் அமர வைத்தது திவாகர் என்னும் காலத்தின் கண்டெடுப்பை. வறுமையை மென்று துப்பிவிட்டு, திறமை சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்து கொண்டது. உண்மையான திறமைசாலிகளைத் தட்டி தட்டி முழு வடிவமாக்கி உயிர் கொடுத்து உலக மேடையில் அரங்கேற்றும்  சூப்பர் சிங்கருக்கு வாழ்த்துக்கள்.