Wednesday, July 11, 2012

நீ..நான்..வலி

இன்று உன்னைத் தொட்டுப் பார்க்கிறேன்... மீண்டும் மீண்டும் உன்னைத் தொட்டுத் தடவியது என் விரல்கள். விழிகளில் நீர் பூத்தது. பூத்த நீர்த்துளிகள் உன் மீது சொட்டுச் சொட்டாய் விழுந்து ஈரமாகியது. அந்த ஈரத்தையும் உடனே துடைத்தது என் விரல்கள். ஏனோ இன்று உன் மேல் அளவுகடந்த கவனத்தைத் திருப்பியது என் மனம். உன்னைத் தனித்துப் பார்க்கத் துவங்கியது என் ஆழ்மனம். எத்தனைப் போராட்டம்.. பத்து வயதிலிருந்து விருந்தாளியைப் போல் வரத் தொடங்கிய புண்களோடு என்னைப் பள்ளிக்குச் சுமந்து சென்றதும்  வலியோடு மீண்டும் வீட்டுக்குத் திரும்பியதும் காலுறையை கழற்ற முடியாமல் நீரில் ஊர வைத்து கழற்றும் போது வழியும் ரத்தத்தைக் கண்டு என் விழிகள் அழுவதும் இப்போது நினைத்தாலும் அழுகை அழுகையாய் வருகிறது. மற்றப் பிள்ளைகள் விளையாடும் போது ஏக்கத்தோடு நான் உன்னைப் பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் புண்கள் ஆறியதும் நாமும் விளையாடலாம் என்று என் மனம் ஆறுதல் சொல்லும். எத்தனை மருந்துகள் எத்தனை ஊசிகள். புண்கள் ஆறியதும் ஓடியாடி விளையாடி பூரித்துப் போவேன். ஆனால் அந்தக் குதூகலமெல்லாம் ஒரு மாதம் கூடத் தாக்குப் பிடிக்காது. மீண்டும் பழைய பள்ளவிதான். மாதம் ஒரு முறையோ இரு முறையோ மீண்டும் வந்து விடும் புண். அந்த நிலையிலும்கூட வீட்டிலிருந்து ஆறு கீலோ மீட்டர் தூரத்திலிருக்கும் பள்ளிக்கு ஒருநாள் கூட மட்டம் போடாமல் போய்வந்ததையும் மாலை வகுப்பு இருந்தால் வீட்டுக்குப் போய் சாப்பிட்டு விட்டு மீண்டும் பள்ளி சென்று படித்து விட்டு வீட்டுக்கு நடந்தே சென்றதையும் நினைக்கும் போது என்னைப் பார்த்து நானே பெருமைப்படுகிறேன். ஒரு நாள் இரு நாள் அல்ல பத்து வருடங்களுக்கு மேல் இந்த வலியையும் வேதனையையும் தாங்கி இருக்கிறேன். பிறகு புண்கள் வந்து போகும் இடைவெளி அதிகரித்து கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமல் போனது, நான் படும் அவதியைப் பார்த்து என் அம்மா வெள்ளியில் பாதங்கள் செய்து அம்மனுக்குச் சாற்றியதன் விளைவாகக் கூட இருக்கலாம். பல வருடங்கள் கடந்து போனது. இப்போதெல்லாம் அடிக்கடி ஒருவித வலி வருகிறது. அப்போதெல்லாம் நீ பட்ட அவதியை என் நாட்குறிப்பேடு எனக்குப் புரட்டிக் காட்டுகிறது. சோர்ந்து விடாதே......விளையாட்டாய் கூட...