Saturday, April 2, 2011

கொட்டித் தீர்த்துவிடு தோழி

வணக்கம். நமக்குள் அறிமுகம் இல்லாமல் இருக்கலாம். நம் தேசங்கள் வேறுபட்டிருக்கலாம். ஆனால் உம்மையும் எம்மையும் இணைத்து வைத்து அழகு பார்க்கிறது கொட்டித்தீர்த்துவிடு தோழி. எரிமலையாய் குமுறிக் கொட்டித்தீர்க்கும் தோழிகளுக்குப்  பனிமலர்களைத் தூவி ஆசிர்வதிக்கும் தங்களின் வார்த்தைகளில் ஒளிந்துள்ள உயிர்ச்சத்துக்கள் என்னை இழுத்து உட்கார வைக்கிறது. தேவையில்லாத பேச்சுக்களைப் பேசும் உதடுகளுக்கு உடனே பூட்டுப் போடுவதும் அறியாமையால் பூட்டிக்கிடக்கும் உள்ளங்களின் பூட்டுடைத்து வாழ்க்கைக்கு வழி காட்டுவதும் தங்களுக்கே உரித்தான பானியோ. எதிர்மறை கருத்துக்களிலேயே உடும்புப்பிடியாக இருக்கும் பெண்களின் நெற்றிப்பொட்டில் தோட்டாக்களால் துளைத்தெடுக்கும் தைரியம் மிக மிக அருமை. பொய்மையின் தோலுரித்து உண்மையின் வெளிச்சத்தில் பெண்மையின் மென்மையை அழகுபடுத்துகிறது தங்களின் சொல்லாடல். அது மட்டுமா. பெண்ணால் கூறப்படும் குற்றச்சாட்டுகளை உடனுக்குடன் நியாயத் தராசில் வைத்து ஆண்மையை அசிங்கப்படுத்தாமல் அழகுபடுத்துகிறது தங்களின் வழக்காடுமுறை. அழகான கருத்துக்களை  உதட்டில் புன்சிரிப்பைத் தேக்கிக்கொண்டு சொற்களைப் பாகெடுத்து தாங்கள் அள்ளி ஊட்டும் ஆணித்தரம் என்னை அசர வைக்கிறது. வாழ்ந்த நாட்களை சாட்சியாய் வைத்து வாழும் நாட்களுக்கு வழி சொல்லும் வண்ணக் கலவையம்மா நீ. அள்ள அள்ளக் குறையாத அட்சயப் பாத்திரத்தைக் கையில் ஏந்தி தாங்கள் அள்ளித் தெளிக்கும் தீர்ப்பைக் கேட்டிருந்தால் வாழ வழி தெரியாத  நல்லத்தங்காள் கூட தனக்கும் தன் குழந்தைகளுக்கும் வாழ்க்கைக்கு வழி தேடியிருந்திருப்பாள். எனக்குத் தங்களை வாழ்த்த வயதுள்ளதா என்று தெரியவில்லை மனதுள்ளது. வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன். அன்பான வாசகர்களே... மக்கள் தொலைக்காட்சியில் மாலை மணி ஆறுக்கு மேல் கொட்டித் தீர்த்துவிடு தோழியுடன் நீங்களும் கைகுலுக்கினால்  பெண்களின் வாழ்க்கையில் விழுந்திருக்கும் சுலுக்குகளுக்கு எப்படி முடிச்சவிழ்க்கப்படுகிறது என்பதைக் காணலாம். உங்களுக்கேகூட வழிபிறக்கலாம்.                .