Friday, June 16, 2017


 

மூச்சுக் காற்றாய் ஒரு சாசனம் -வ. துளசி

இப்பள்ளியில்
கருக்கல் கணை தொடுப்பதும்
கல்லெறிந்து பூக்கள் விழுவதும்
உந்தன் விழி வீச்சின் ஒளிக்கீற்றில்

உற்சாகத்தின்
மொத்த உருவமும்
அட்சயபாத்திரமானது
உந்தன் உள்ளங்கையின் ரேகைகளில்

தீர்மானங்கள் அனைத்தும்
திணறிக்கொண்டு
வரிசையில் நின்றன
உந்தன் விரல் அசைவின் காத்திருப்புகளில்

ஏன்? எதற்கு?
என்ற பட்டிமன்றத்தில்
தோற்றும்போயின
தொண்டைக் குழியில்
சிக்கித் தவித்த கவலங்கள்

கல்லும் முள்ளும்
கால்களுக்கு மெத்தையென
தூசித் தட்டிப்
பாதங்களைப் பதித்துச் சென்றீர்
உந்தன் பார்வை பட்ட இடமெல்லாம்.

நுழைவாயில் முதல் அடிவாயில் வரை
நூல் பிடித்த அலங்காரங்கள் அத்தனையும்
இடம் பெறத் தவறாது
உந்தன் பெயர் பதிவேட்டில்

கல்விக் கருவறைக்குள்
கற்பூர ஆராதனை
கடிந்து கொள்ளவில்லை
வெற்றித் திருமகள்

உடல் சோர்ந்த போதும்
உள்ளம் சோரவில்லை
மனம் சாய்ந்த போதும் மடிசாயவில்லை
இராஜாளியாய் வட்டமிட்ட முயற்சிகள்

எதற்காக அத்தனையும் எதற்காக
உமக்காகவா அல்லது
ஊருக்காகவா
உரித்தெடுத்துப் பார்ப்பவர்
எத்தனை பேர்.

வானவில்லின் வண்ணங்களாய்
நீர் சென்றாலும் செல்லாது
நிலைத்திருக்கும்
உமது மூச்சுக் காற்று

இப்பள்ளியில்