Monday, February 28, 2011

அரிதாரம் பூசாதே

உண்மையாய் இருக்கப் பழகு. உண்மை  இறைவன் உனக்குக் கொடுத்த அழகான உருவத்தை வெளிக்கொணரும். பொய்மையாய் இருக்க நீ முயற்சித்தால் உன் உண்மையான உருவத்துக்கு அரிதாரம் பூசி உலாவ விடுகிறாய் என்று அர்த்தம். எதற்கு பொய் வேசம். பிறர் உன்னை  மதிக்க வேண்டும் என்பதற்காகவா. இல்லை. அப்படி நீயாக நினைத்துக்கொள்கிறாய். அதனால் நீ அசிங்கப்பட்டுக்கொண்டிருக்கிறாய் என்பது உன்னால் அறியப்பட முடியாத விஷயம். உன் பேச்சே நீ எப்படிப்பட்டவன் என்பதைப் பிறருக்குக் காட்டிக்கொடுக்கும். நீ சொல்லும் ஒரு சிறு பொய்கூட அதிக நேரம் தாக்குப்பிடிக்காது. சில வினாடி, சில நிமிடம், சில மணி அல்லது சில நாட்களில் அது தன் ஆடையை அவிழ்த்துப் போட்டுவிட்டு அம்மணமாய் நிற்கும். அப்போது நீ பிறர் முன் கூனிக் குருகி நிற்பாய். அதை சரிக்கட்ட இன்னொரு பொய்யை சொல்ல வேண்டி இருக்கும். இப்படி பொய் மேல் பொய் சொல்லி உன் மெய்கூட பொய்யாகிப் போகும். உண்மையை ஒப்புக்கொள். அதில் ஒரு தெளிவு இருக்கும். மன நிம்மதி இருக்கும். பிறரின் கோபத்துக்கு ஆளாக வேண்டியிராது. பிறரின் சாபத்திலிருந்தும் தடுக்கும். தன் பலவீனம் வெளியில் தெரியாமல் இருப்பதற்காகவே பெரும்பாலானோர் பொய்மைக்குள் புகுந்து கொள்கின்றனர். பலவீனத்தை எதற்காக மறைக்க வேண்டும். பலவீனத்தையே உன் பலமாக மாற்று. அவை உன்னைப் பதப்படுத்தும். பிறரை உன் வசப்படுத்தும். உன்னை வெளிப்படுத்திக்கொள்ள வெட்கப்படாதே. அவமானத்திலிருந்து தப்பித்துக்கொள்வாய். உண்மை உன் உள்ளத்தை அழகாக்கும். உருவத்தை அழகாக்கும். உண்மை எப்படி இருக்கும் என்று தெரியாதா....குழந்தையை உற்றுக் கவனி.அங்கே உண்மை ஒளிக்காமல் வைக்கப்பட்டுள்ளது.