Monday, January 2, 2012

ஓர் அந்நியம்

மனதுக்குள் ஒரு சுமை. நேரம் ஆக ஆக சுமையின் பாரம் அதிகரித்துக்கொண்டே போனது. என்னைச் சுற்றியிருந்த சுற்றமெல்லாம் தங்களின் அன்பையும் ஆதங்கங்களையும் பகிர்ந்துகொண்டிருக்கும்போது என்னால் மட்டும் அந்த சூழலுக்குள் நுழையமுடியவில்லை. என் மனம் எங்கோ தள்ளிநின்றது. எல்லோரும் உள்ளே அமர்ந்திருக்க நான் மட்டும் வெளியில் அமர்ந்து வானத்தை அன்னாந்து நோக்கிக்கொண்டிருந்தேன். வானத்தின் கரிய நிறம் மேகத்தையோ நட்சத்திரத்தையோகூட காட்டவில்லை. மழைத்தூரலை மட்டுமே விளக்கொளி இருளின் இடையில் ஆங்காங்கே ஊடுருவிக் காட்டியது. மனதில் இருந்த சுமையையும் தாண்டி அந்த மழைத்தூரலையும் கொஞ்சம் ரசித்தேன். ஆனால் சுமை குறையவில்லை. எதிர்பார்ப்பின் உறவு தூரத்தில் இருக்கும் போது துயரத்தின் சுவடு முகம் காட்டவில்லையானாலும் மனதை அழுத்திக்கொண்டே இருந்தது. நான் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து மூன்று மீட்ட்ர் தூரத்தில் என் கவனம் திரும்பியது. குத்தாங்காலிட்டு இரு கைகளாலும் கால்களைக் கட்டிக்கொண்டு வானத்தை வெறித்தவாறு அமர்ந்திருந்த அந்தப் பெண். அவள் அந்த வீட்டின் பணிப்பெண். அந்த இருட்டிலும் லேசான விளக்கொளியில் அவளுடைய முகம் எனக்கு நன்றாகவே தெரிந்தது. அந்த முகத்தில் அப்பிக்கொண்டிருந்த சோகத்தை யாராலும் வழித்தெரிய முடியாத அளவுக்கு  தன்னிலை மறந்து அமர்ந்திருந்த அவளுக்குள் என் சிந்தனை கூடு பாய்ந்தது. தன்னைச் சார்ந்துள்ள உறவுகளைக் கரை சேர்க்க தன் சந்தோஷத்தையும் சுதந்திரத்தையும் அடகு வைத்து ஏக்கத்தின் மடியில் அமர்ந்திருக்கும் அவளைவிடவா.....நாடு நகரம் மதம் மொழி சொந்தபந்தம் அத்தனையும் தொலைதூர கனவுகளாக கசிந்துகொண்டிருக்கும் அவளது பரிதவிப்பின் விளிம்பில் எனது சோகம் சரியத் தொடங்கியது. தேசம் விட்டு தேசம் வந்து வீட்டு வேலை என்ற பெயரில் கையேந்தி நிற்கும் அந்தப் பெண்ணைக் காட்டியவாறு நிலாச்சோறு ஊட்டி என் சோகத்தையும் ஏக்கத்தையும் மறந்து போகச் செய்தது நிலவைக் காணாத அந்த இரவு.