Thursday, March 3, 2011

மயிலிறகாய்......

கொட்டினால் கோலம் கிறுக்கினால் ஓவியம் என்று வார்த்தைகளால் சுண்டி இழுத்து மயிலிறகாய் என்னை வருடிச்சென்றவள் நீ. வாழ்த்துக் கூறியதும் உன் இதழ் உதிர்த்த புன்னகையின் பூரிப்பு உன் விழிகளில் காணவில்லையே. ஆசையாய் தேடி அன்பாய் நீட்டிய அன்பளிப்பை ஏற்றுக்கொள்வதில் ஏற்பட்ட தயக்கம் உன்னைக்  காட்டிக் கொடுக்கிறதே. உனக்குள்ளும் ஏதோ ஒன்று உராய்ந்துகொண்டிருக்கிறது என்பதை உணர்கிறேன். சொல்லிவிடு. சொன்னால் உன்னை சிதைத்துக் கொண்டிருக்கும் சிராய்ப்புக் காயம்  சீரழிந்து போகும். சொல்லாத சோகம் சுகமாய் உன்னை சொறிந்துகொண்டே இருக்கும். சோகம்கூட சில சமயங்களில் சுகமாய்தான் இருக்கும். ஆனால் சுகமே சோகம்தான் என நினைத்தால் சோர்ந்துபோகும் வாழ்க்கை. துரத்திவிடு. தூர துரத்திவிடு. சோகம் உன்னைத் தின்று விடுவதற்குள் நீ சோகத்தைத் தின்றுவிடு. வானத்தில் இருக்கும் நிலவைப் போல தூரமாய் வைத்துவிடு. நிலவுகூட தூரத்தில் இருக்கும்போது அழகாய்த்தான் இருக்கிறது. அருகில் வைத்துக்கொள்ள முடியுமா. உன்னுடன் பல்லாங்குழி ஆடிக்கொண்டிருக்கும் துன்பத்திற்கு தூபம் போடாதே. உன் தொண்டைக்குழிக்குள் சிக்கித்தவிக்கும் உருண்டையை உமிழ்ந்துவிடு. உன்னைச்சுற்றிப் படர்ந்திருக்கும் அழகான விஷயங்களை ஆழ்ந்து பார். அனுபவித்துப்பார். அவற்றை இரசித்துப்பார். இரசிப்பதுகூட ஒரு கலைதான். உன்னிடம் அந்தக் கலை கொட்டிக்கிடக்கிறது என்பது எனக்குத் தெரியும். போனதைப் பற்றியே யோசித்தால் இருப்பதைப் பற்றி எப்போது நினைப்பது. எப்போது இரசிப்பது. கிடக்காத சுகத்தை எண்ணித் தேய்ந்து போகாதே. உனக்கு இறைவன் கொடுத்த சுகங்கள் எத்தனையோ அவற்றை எண்ணி நெகிழ்ந்து போ. உனக்கும் கீழே இருப்பவர் கோடி. கால்களுக்கு செருப்பு கிடக்கவில்லையே என ஏக்கம் கொள்ளாதே. ஊனமில்லாத கால்கள் கொடுக்கப்பட்டுள்ளதே என திருப்தி கொள். சொல் நன்றியை இறைவனுக்கு.