Sunday, April 17, 2011

தேங்கி நிற்கிறேன்

ஒரு துளி கண்ணீர் ஓராயிரம் கதை சொல்லும். உன் விசும்பல் என் செவிகளுக்குள்  ரீங்காரமிட்டு  உள்ளத்து உணர்வுகளை  மகரந்தமாய் என்னிடம் சேர்க்கின்றது. அழாதே! அழுது என்னை உடைத்துவிடாதே! இதை  கேட்டுப் பெறவில்லை நான். இது சூழ்ச்சியா சூட்சுமமா தெரியாது. காலம் எனக்குக் கம்பலம் விரிக்கின்றது. போகாமல் இருக்க வேண்டும் என பூவேலி போடுகின்றது உன் விழிகள். போய்விடாதே என மனம் மண்டியிட்டு மன்றாடுகிறது. முடிந்தவரை முயன்றேன் முடியாமல் தேய்கிறேன். எல்லா உறவுகளுக்குள்ளும் ஏதாவது எதிர்பார்ப்புகள் இருந்துகொண்டே இருக்கும். ஆனால் எந்த  எதிர்பார்ப்புகளுக்குள்ளும் சிறைபடாது சிறகு விரிப்பது தூய நட்பு மட்டும்தான். தூய நட்பின் கதகதப்பில் குளிர்காய்ந்த அன்பு என்றும் மாறாது மறையாது. எனக்காக நீயோ உனக்காக நானோ எதுவும் செய்யவில்லை எதையும் கேட்கவில்லை இருப்பினும் ஏதோ ஓர் இழப்பு இழையோடுகிறது. பிரிவொன்று சொல்லிக்கொள்ளாமல் புறப்பட்டு  வந்து என் கரம் பற்றி நிற்பதைப் பார்த்ததும் உன் விழியோரம் தேங்கி நிற்கும் சோகத்துக்கு விலையும் உண்டா சொல் கண்ணே. நடந்து முடிந்த நாட்களும் கடந்து சென்ற காட்சிகளும் கண்ணுக்குள் கவி பாடுகிறது. சந்தோஷ நாட்குறிப்பில் நம் முகவரிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதைப் போல் துன்பம் தூண்டில்போடும் இந்த நேரத்தில் உடன் இருந்து உதவவிடாமல் என்னை விலக்கி வைத்து வேடிக்கை காட்டுகிறது கால தேவதை. என்ன செய்வேன் நான்.  அலுங்காமல் குலுங்காமல் அட்சயப்பாத்திரத்தில் அள்ளி வைத்து அழகு பார்த்தாய் என்னை. உன்னை எங்கே வைப்பேன் நான். நீ ரசித்து ரசித்து தூதுவிட்ட ஒவ்வொரு வார்த்தையும் மருதாணி பூசிக்கொண்டு என் முன் வட்டமடிக்கிறது. உன்னைத் தேற்றவும் முடியாமல் தேம்பவும் முடியாமல் தேங்கி நிற்கிறேன்.