Friday, February 25, 2011

மௌனமாய் இருந்துவிடு...



மௌனம்...... இயற்கை மனிதனுக்குச் சொன்ன மகத்தான விஷயம். பேசுவதை நிறுத்து. நினைவுகளை நிறுத்து. மௌனமாய் இரு. பத்து நிமிடம் உயிருள்ள பிணமாய் வாழ்ந்து பார். மனம் திறந்து கொள்ளும். இயற்கை உன் மனதோடு பேச ஆரம்பிக்கும். உன் உடலோடு பேச ஆரம்பிக்கும். இயற்கை தன் அற்புத சக்திகளை உன் உடலுக்குள் செலுத்தத் துவங்கும். யாரும் இல்லாத இடத்தில் அமைதியான சூழலில் உன் மனதைத் திறந்து மௌனமாய் அமர்ந்து வானத்தை உற்றுப் பார். வானம் உனக்கு வசப்படும். கோடி வெண்புள்ளிகள் வெளிச்சக் கூட்டமாய் உன்னைத் தேடி வரும். மனதை இழுத்து நிறுத்தினால் கண்களைத் திறந்து கொண்டே இக்காட்சியைப் பார்க்கலாம். அந்த வெளிச்சப் பிழம்பு முக்கோண வடிவில் உருமாறி உயிர் துடிப்போடு உன்னோடு தொடர்பு கொள்ளும். இயற்கையே குருவாக மாறி உன்னை வழி நடத்தும். மௌனமாய் இருந்து பார். காற்றும் மரமும் செடி கொடிகளும் மலரும் மண்ணும் மழையும் சொல்லும் இரகசியம் உன் காதுக்குள் கேட்கும். நீ தேடி நிற்கும் விஷயங்கள் யாவும் உன்னைத் தேடி வரும். மழையைப் பார்த்து ஓடி ஒளியாதே. குழந்தை தாய் மடியில் ஆசையாய்த் தவழ்ந்து அனுபவிக்கும் சந்தோசத்தைப் போல் மழையோடு உறவாடிப்பார். மழை உன்னைத் தண்டிக்காது; உன் உச்சி முகர்ந்து உள்ளொளி பெருக்கி உன்னை வாழ்த்திவிட்டுப் போகும். கோபத்தை மட்டுமே அள்ளித் தெளிப்பவரிடம் மௌனத்தை அன்பளிப்பாய் கொடுத்துவிடு. அவரது கோபம்கூட நிர்கதியாகிப்போகும். மௌனத்தை தாய்மொழியாய்க் கொண்டு மகாத்மாவாக மாறிவிடச் சொல்லவில்லை. மௌனம் உன்னை மனிதனாக மாற்றும். மனிதம் உன்னை மகாத்மாவாக மாற்றும். உன்னை உன்னை என்று நான் சொன்னதெல்லாம் உனக்கு மட்டுமல்ல. எனக்கும்தான். நான் கற்றதும் பெற்றதும் இதைப் படிக்கும் உன்னோடும் பகிர்ந்து கொள்கிறேன்.

1 comment: