Sunday, March 10, 2013

அசோகவர்த்தினியாகவோ..அசோகவர்மனாகவோ..


பஞ்ச பூதங்கள் பஞ்சாங்கம் சொல்லவில்லையே எங்கள் குலவிளக்கு அணையப்போகிறது என்று...எப்படி... எப்படி நடந்தது இது. கண்ணிமைக்கும் நேரத்தில் களவு போனது எப்படி. கண்களைத் திறந்துகொண்டுதானே தவம் கிடந்தோம்.  தவம் களையாமல் எங்களையே களைத்துப்போட்டுவிட்ட சூட்சுமத்தை அறியாமல் தவிக்கிறோம்.எங்கள் கண்களில் மண்ணைத் தூவியது யார். விடை காண முடியாத விடுகதையாக்கிவிட்டீரே. உங்கள் பிள்ளைகளுக்கு மட்டும் நீங்கள் பாவா இல்லை. எங்களுக்கும் நீங்கள் பாவாதான். அவ்வளவு பிடிக்கும் உங்களை. எங்களுக்கு மட்டுமா உங்களைப் பிடித்திருந்தது. அக்கம் பக்கம் முதற்கொண்டு உங்களோடு நட்புக்கொண்ட அத்தனைப் பேருக்கும் அல்லவா உங்களைப் பிடித்திருந்தது. அதனால்தானோ என்னவோ ஆண்டவனுக்கும் உங்களை அதிகம் பிடித்துப் போனது போலும். நான் உங்களை மாமா என்று அழைத்ததே இல்லை. நீங்கள் அதற்கும் மேலே  தந்தையின் இருக்கையில் அல்லவா  அமர்ந்துகொண்டு இருந்தீர்கள். உங்கள் அன்பு மழையில் சாரலாகவும் தூரலாகவும் நாங்களும் உங்களோடு இணைந்திருந்தோம். உங்கள் பண்பின் நேர்த்தியை பிறருக்கும் பரிந்துரைத்திருக்கிறோம். எங்களது ஒவ்வொரு அசைவிலும் நீங்கள் நிறைந்துள்ளீர்கள்.  நீங்கள் இல்லாத நிகழ்வே இல்லையே பாவா. இனி.. எப்படி.. தெரியவில்லை... நீங்கள் எப்போதுமே எங்களை எதுக்காகவும் காக்க வைத்ததே இல்லை. ஆனால் அந்த  மூன்று நாட்கள்  அன்ன ஆகாரமின்றி நாங்கள் கொண்ட விரதத்தை சிவராத்திரியாக்கிவிட்டு நீங்கள் சிவலோகம் போனது எப்படி. அந்த இரவு நாங்கள்  விழி திறந்து காத்திருக்க நீங்கள் மூடிய விழியைத் திறக்காமலேயே காத்திருந்தது எதற்காக. காலத்தைக் கடந்து கரைந்து போகவா. அப்படி என்ன அவசரம். இன்னும் கொஞ்ச காலம் எங்களோடு வாழ்ந்திருக்கலாமே. அழைக்காமலேயே உதவிக்கு ஓடோடி வருவீர்களே. இப்போது நாங்கள் எல்லோரும் அழைத்தும் கூட வர மறுத்தது ஏன். எவ்வளவு நல்ல குணங்கள் உங்களிடம். இனி யாரிடம் போய் தேடுவது. எங்குப் போய் தேடுவது. எதை சொல்லியும் உள்ளத்தைத் தேற்றிக் கொள்ள முடியவில்லை. எப்படித் தேற்றினாலும் காயத்தை ஆற்றிக்கொள்ள முடியவில்லை. நீங்கள் இல்லாத ஒவ்வொரு கனமும் முள் முனையில் முகாரி எழுதுகிறது.  கடைசியாக நீங்கள் பறித்த நெல்லியின் கிளை பாரம் தாங்காமல் வளைந்து தொங்கியதும் அதிலுள்ள காய்களைப் பறித்துவிட்டு  நான் கிளையை உடைக்கச் சொன்ன போது அதில் இருக்கின்ற பிஞ்சுகள் எல்லாம் முற்றியதும் உடைக்கிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றீர்களே. நினைவில்லையா... அப்போது அந்தக் கிளையின் பாரம் குறைந்ததும் நீங்கள் பிடியைத் தளர்த்தியவுடன் கிளை மேலே போய்விட்டது. இப்போது காய்களெல்லாம் முற்றி அந்தக் கிளை பாரம் தாங்காமல் மீண்டும் வளைந்து பூமியை நோக்கிக் கொண்டிருக்கிறது.  நான் சொல்லும் முன்பே நெல்லிக்காயைப் பறித்து பங்கு போட்டுவிட்டுப் போவீர்களே. இப்போது உங்களுக்கும் சேர்த்து நானே பறிக்கிறேன். நான் மட்டுமே பறிக்கிறேன். உங்களை நாங்கள் புதைக்கவில்லை விதைத்திருக்கிறோம். மீண்டும் முளைத்து வருவதற்காக. அசோகவர்த்தினியாகவோ... அசோகவர்மனாகவோ... மீண்டும் உங்கள் வரவுக்காக நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்.

4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. உங்கள் கண்கள்தானே குளமானது என் பாலை வனத்தில் ஏன் நீர் சுரந்தது. மீண்டும் என் சகோதரனின் ஒருவனை நான் இழந்துவிட்டேன்

    ReplyDelete
  3. இன்பத்தைவிட துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதில் ஆன்மா சுகப்படுகிறது. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete