Monday, February 24, 2014

விரிசலில் ஒரு புகைச்சல்



முன்புபோல் இல்லை. இங்கு எதுவுமே முன்புபோல் இல்லை. நமக்குள் விழுந்தது விரிசலா..இல்லை. அதற்கு வழியில்லை. ஏதோவொன்று  என்னை வாட்டுகிறது. உன்னையும் என்னையும் முடிச்சுப்போட்ட பகிர்வுகள் முன்புபோல் இல்லை. விடியற்காலையில் வணக்கம் கூறும் புன்னகை கூட இப்போது வறுமையின் வாசலில் திரைச்சீலையாகிவிட்டது. மூடித் திறந்த முக்காடு முனகலோடு காற்றில் பறக்க விட்டது யார் தவறு. சுண்டு விரலில் சுற்றி இழுக்க சுடச்சுட சொன்னேன்  வழியொன்று. புல்லுருவி பூக்கும் முன்பே பூச்சி மருந்து பூசச் சொன்னேன். கேட்கவில்லையே..நீ. நான் முன்னறிந்து சொன்னதை முற்றுப்புள்ளியாக்கிவிட்டு, உன் உள்ளத்தில் உள்ளதை உள்ளங்கையில் ஏந்தினாய். கலை எடுப்பதாய் எண்ணி உரம் போட்டு விட்டாயே. சேற்று நீரை அள்ளித் தெளித்த பிறகு எங்கிருந்து வரும் சந்தன வாசம். மனதுக்குள் விழுந்த கீறல் வடுவாகி போய்விடுமோ என்ற பயம் உனக்கு மட்டுமல்ல எனக்கும்தான். மடியேந்திய சந்தோஷமெல்லாம் மறக்கப்படவில்லை, மறுக்கப்பட்டுவிட்டது. காலம் மீண்டும் ஒரு முறை கவிதை படிக்குமா இல்லை எட்டி நின்று வேடிக்கை பார்க்குமா என்று தெரியவில்லை எனக்கு. உனது முடிவு எதை முடித்து வைத்ததென்று புரிகிறதா இப்போது. முழுமையாய் நனைந்த பிறகு முக்காடு விழுந்தால் என்ன, பறந்தால் என்ன.

No comments:

Post a Comment